சட்டத்தரணி சுகாஸின் குற்றச்சாட்டு கோமாளித்தனமானது- யாழ் மாநகர முதல்வர்!

manivannan 720x450 1
manivannan 720x450 1

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக  சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் கூறியுள்ளதாவது “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் மீது பாரதூரமான குற்ற சாட்டுக்கள் உள்ளன. அதனால் அவர்கள் இருவரையும் எமது அணிக்குள் உள்வாங்கவில்லை.

ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர் மற்றையவர் மாநகர சபையில் வேலை பெற்று தரலாம் என கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர் என எனக்கு வாய் மொழி மூல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

குறித்த நபர் மாநகர சபை பணத்தினை கையாடல் செய்யாமையால் என்னால் முதல்வர் எனும் ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஆனாலும் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தால், சட்டத்தரணி எனும் ரீதியில் நிச்சயமாக அவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன். என தெரிவித்தார்.

அதேவேளை,  நல்லூர் பிரதேச சபையின் கடந்த அமர்வின்போது, தங்களுடன் (மணிவண்ணனுடன்) மது போதையில் வந்த காடையர் கூட்டம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்த குற்றச்சட்டு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, “கோமாளித்தனமான கருத்துக்களுக்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விடயங்கள் தொடர்பில் விவாதிப்போம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.