வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்ற சுகாதாரத் துறையினர்!

114379358 e6d33e74 1deb 4f40 9686 d38004a4c2d1
114379358 e6d33e74 1deb 4f40 9686 d38004a4c2d1

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய இரண்டாம் நாளில் ஆயிரத்து 530 பேர் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 15 சதவீதத்தினர் ஆகும்.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.

மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் முதல் நாளான நேற்று 2 ஆயிரத்து 997 பேர் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இது 30 சதவீதத்தினர் ஆகும்.

இரண்டாம் நாளான இன்று வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 530 சுகாதார சேவையாளர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 875 பேரும் கிளிநொச்சியில் 100 பேரும் மன்னாரில் 200 பேரும் வவுனியாவில் 210 பேரும் முல்லைத்தீவில் 145 பேரும் இன்று கொரோனா தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.

மூன்றாவது நாள் தடுப்பூசி மருந்து வழங்கல் நாளை முன்னெடுக்கப்படும் – என்றார்.