உள்ளக விடயங்களில் வெளிநாடுகள் தலையிடவே கூடாது; சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

china dragan.600 1
china dragan.600 1

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது முடிவும் செயற்பாடும் இருக்கும்என்று இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும் ஊடகப் பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார்.

அந்தவகையில் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் என்பதுள்ள விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும். இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மனித உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அதடினப்படையில் சில நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்கையில், இலங்கை அபாயரகமான பாதையில் பயணிக்கின்றது எனவும், அதேநேரம், ஏற்கனவே நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலைச் செய்வதற்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுள்ளிட்ட பல விடயங்களை குறிப்பட்ட காட்டமான உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன. இதுபற்றிய மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இணை அனுசரணை நாடுகளால் புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பில் மக்கள் சீனக் குடியரசு எவ்விதமான பிரதிபலிப்பைப் போகின்றது என்றும் வினவியபோதே இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவருமான ஊடகப் பேச்சாளருமான மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நீங்கள் எழுப்பிய இரண்டு வினாக்கள் தொடர்பில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. முதலாவதாக, மனித உரிமைகள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தொடர்பான விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயமாகும். இலங்கை இறைமை உள்ள நாடு என்ற வகையில் இந்த விடயத்தில் பிற தரப்புக்கள் தலையிடுவது பொருத்தமற்றதாகும்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்கள் சீனக் குடியரசின் உள்ளக விடயங்களில் பிறநாடுகள் தலையீடுகளைச் செய்வதை விரும்புவதில்லை. அதற்கு இடமளிப்பதும் இல்லை. அது போன்றே உலகில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகளோ அல்லது சக்திகளோ தலையீடு செய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது நிலைப்பாடு அமையும்.

அடுத்ததாக, மனித உரிமைகள் விடயமானது இறைமையுள்ள ஒவ்வொரு நாடுகளாலும் பின்பற்றப்படும் விடயமாகும். இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் விடயத்தை நாடொன்றுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

இதேவேளை, இலங்கை விவகாரம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அனுப்பப்பட்டு செயலாளர் நாயகத்தின் பரிந்துரையில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்காக அனுப்பப்படுகின்றபோது, சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்துமா என்று வினா எழுப்பியபோது, “அவ்வாறான நிலைமை ஏற்படும் என்று தெரியவில்லை. இருப்பினும் நான் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடே இந்த வினாவுக்கும் பொருந்தும்” என்றும் தெரிவித்தார்.