பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானதே – டக்ளஸ் தேவானந்தா

IMG 20210206 WA0024
IMG 20210206 WA0024

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…
கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும்,அழிவுகளையும் கொடுத்ததால் தற்போத போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருதார். இந்த போராட்டம் ஒரு சுயலாபம் கொண்டது இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை.

உங்களுக்கு தெரியும் மாகாண சபையை எதிர்த்தவர்களுக்கு ஒரு நீண்ட தூர பார்வை இருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது ஆனால் மாகாண சபையை ஏற்று நடத்தியவர்களுக்கு தூரப்பார்வை இருந்தது அவர்களிடம் கட்டுப்பாடு இல்லை இதனால் அது விடுபட்டு போனது.

நீங்கள் கூறுகின்ற இந்த விடையங்கள் எல்லாம் அவர்களுடைய சுயலாப அரசியலோடு சம்பந்தப்பட்டதே தவிர அதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்பார்க்கின்றார்கள்.

ஒரு வகையில் இந்த அரசாங்கத்திற்கு தென்னிலங்கையில் வலு சேர்க்கின்றார்கள், சர்வதேச சமுகத்திற்கு காட்டுகின்றார்கள் இந்த அரசாங்கத்தில் தாங்கள் போராட்டங்களை செய்யலாம் எனவும், மறு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர்களால் எங்களுடைய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை.

இது அரசாங்கத்திற்கு சார்பான போராட்டமே தவிர எங்களுடைய மக்களுடைய விடையங்களை வலுப்படுத்த வேண்டும் என்றோ அல்லது எங்களது மக்களுக்கான போராட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.