தமிழர்களின் பண்பாட்டை பிரதி பலிக்கின்ற சான்றுகள் உள்ள இடங்களை மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான விடயமல்ல -துரைரெத்தினம்

download 1 2
download 1 2

தமிழர்களின் பண்பாட்டை பிரதி பலிக்கின்ற சான்றுகள் உள்ள இடங்களை மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான விடயமல்ல என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா மன்றம், இரா.துரைரெத்தினம் எல்லாவல மேதானந்ததேரர் தெரிவித்த கருத்தை நிராகரித்து இன்று சனிக்கிழமை (06) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழர்களே வாழவில்லை எனவும், 99வீதம் பௌத்த விகாரைகளே வடக்கு கிழக்கில் இருந்ததாகவும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் புனிதத் தலங்கள் பௌத்த மதத்திற்குரியதாகுமென தமிழர்களின் கலாசார ரீதியான வரலாற்றை திரிபுபடுத்திக் கூறுவதென்பது தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இப்படிப்பட்ட ஒருவரை மாண்புமிகு ஜனாதிபதி செயலணியில் நியமித்து இலங்கையில் இனங்களுக்குள் பகை முரண்பாட்டை தோற்று விப்பதற்கு வழி சமைக்கும்.

தமிழர்களை நிம்மதியாக இலங்கையில் வாழ விடாமல் ஒரு பௌத்த மதகுரு தமிழர்களுக்கு எதிராக கூறுவதென்பது மதகுருவிற்கான பண்பாக இருக்க முடியாது. பல்லினமதம்,பலமொழி,பலகலாசாரத்தைக் கொண்ட இந் நாட்டில் தமிழர்களை ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொண்டு நிருவாக ரீதியாக வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும் அமுலாக்கப்படுவது இப்படிப்பட்ட மதகுருமாருக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் கலாசார பண்பாட்டை பிரதி பலிக்கின்ற சான்றுகள் உள்ள இடங்களையே திரிபுபடுத்தி மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமான விடயங்களல்ல. இவை மட்டுமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபது இடங்களுக்கு மேற்பட்ட புராதான வரலாற்றைக் கொண்ட இடங்களை இராணுவமும் பார்வையிட்டுச் சென்றுள்ளது நல்ல நோக்கத்திற்காக அல்ல. ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் கூட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பேச்சுக்களே அவர் உரையில் தென்பட்டது.

எனவே தமிழர்கள் இந் நாட்டின் பிரஜைகள் என்பதை ஜனாதிபதி; ஏற்றுக் கொண்டு தமிழர்களும் இலங்கை பிரஜைகளாக சம உரிமையுடன். அதிகாரம் உள்ளவர்களாக வாழ்வதற்கு சர்வதேச ரீதியான அயல் நாடுகளும் வழிவகுக்க வேண்டும். ஏன்பதுடன் தமிழர்களின் வரலாற்றை திரிபு படுத்துகின்ற விடயங்களை கைவிடுமாறு விநயமாக கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது