வாகரை பிரதேச சபையை இழந்த கூட்டமைப்பு!

55
55

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கண்ணப்பன் கணேசன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தில் 7 உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் தெரிவு இடம்பெற்று வருகிறது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று வாகரை பிரதேச சபையில் நடைபெற்ற தவிசாளர் தெரிவு தொடர்பான தேர்தலின் போது இவர் தெரிவு செய்யப்பட்டார்.

18 சபை உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் 16 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமிருந்த சபையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வசமானது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் வந்து புதிய தவிசாளருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் வாகரை பிரதேசத்தின் கல்வி,வாழ்வாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய சேவையாற்ற வேண்டும் என்றும் மக்களுக்காவே நாம் சேவையாற்ற வந்துள்ளோம் என்றும் அறிவுரை வழங்கினார்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் கடந்த இரண்டரை வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி நிலைவி வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியுற்றது.

இதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரினால் புதிய தவிசாளர் தெரிவிற்கான விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.