உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: உண்மையான குற்றவாளிகள் உடன் தூக்கிலிடப்படவேண்டும் – சஜித் அணி

பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உடன் மரணதண்டனை நிறைவேற்றபட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான குற்றவாளிகளை மறைத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்க முடியாது.

இந்தத் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல். நாட்டின் ஆட்சிப்பீடத்துக்குச் சவால்விட்ட தாக்குதல்.

எனவே, ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உடன் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால், இது இந்த ஆட்சியில் நடப்பது சந்தேகமே. அதனால்தான் பேராயர் தலைமையிலான தரப்பினர் சர்வதேச விசாரணையைக் கோரும் நிலைக்கு வந்துள்ளனர்.

மனிதப் படுகொலைகளை அரங்கேற்றியவர்களுக்கு மரணதண்டனையே பரிசாகக் கிடைக்க வேண்டும். அதையடுத்து அவர்களைப் பாதுகாப்பது நாட்டில் மேலும் பெரும் விபரீதங்களுக்கே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.