நடிகர் விவேக் அவர்கள் நாட்டிய மரங்களால்என்றென்றும் எம் நினைவில் வாழ்வார்பொ.ஐங்கரநேசன் அஞ்சலி!

Photo Ayngaranesan 2
Photo Ayngaranesan 2

நடிகர் விவேக் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிச் சின்னக் கலைவாணர் என்று தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்றவர். வெள்ளித் திரையில் கிடைத்த புகழைக் கட்டாந்தரையில் மரங்களை நடுகை செய்வதற்குப் பயன்படுத்திப் பசுமைக் காவலர் என்று பெயர் பெற்றவர். அவர் புகழுடம்பு மறைந்தாலும் அவர் நாட்டிய மரங்களால் எம் நினைவில் என்றென்றும் வாழ்வார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

Photo vivek 01

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான விவேக்கின் மறைவு குறித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்டிருக்கும் அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அஞ்சலிக்குறிப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நடிகர் விவேக் நகைச்சுவையில் தனக்கெனத் தனியான பாணியை உருவாக்கியவர். ரசிகர்களைச் சிரித்துவிட்டு மட்டும் போகாமல் சிந்திக்கவும் தூண்டியவர். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூட நம்பிக்கைகளைக் களைவதற்குத் தன்நடிப்பாற்றலால் விழிப்புணர்வு ஊட்டியவர் . நிழலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சீர்திருத்தக் கருத்துகளின் பரப்புரையாளராகப் சளைக்காது பணியாற்றியவர்.

பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவுரைப்படி சூடாகும் பூமியைக் குளிர்விக்கும் நோக்கில் ஒருகோடி மரங்களை நடுகை செய்யும் பணியை ஆரம்பித்தவர். கிறீன் கலாம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக முப்பத்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நிலையில் மரணம் அவரை அரவணைத்துக் கொண்டது.

மரங்களை நடுகை செய்பவர்களின் நினைவுகளுக்கு மரணம் இல்லை. அவர்கள் நடுகை செய்த மரங்களாலும், அம்மரங்களிலிருந்து வீழ்ந்து பரவும் விதைகளின் துளிர்ப்பாலும் சந்ததிகள் கடந்தும் அவர்கள் நினைவிற்கொள்ளப்படுவார்கள். விவேக் அவர்களின் நாமமும் பசுமை உலகில் அழியாது நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.