மலையக விவசாயிகள் பழிவாங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – வே. இராதாகிருஷ்ணன்

rathakrusnan1
rathakrusnan1

கிழங்கு அறுவடை இடம்பெறும் காலத்தில் அரசாங்கம் கிழங்கு இறக்குமதி செய்திருக்கின்றது. இது கம்பனிகளுடன் இணைந்து அரசாங்கம் மலையக விவசாயிகளை பழிவாங்கும் செயலாகும். இதனை அரசாங்கம் நிறுத்தவேண்டும். அத்துடன் நீதிமன்ற அதிகாரங்களை ஆணைக்குழு அமைத்து நாடாளுமன்றத்துக்கு எடுத்துக்கொள்வது சட்டத்துக்கு முரணாகும் என வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதிவரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

1977 இல் இருந்து இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த பழிவாங்கலில் அரச அதிகாரிகள்,இலங்கை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், சதோச நிறுவன அதிகாரிகளே தொடர்ந்து பழிவாங்கப்படுகின்றனர்.

அந்த வகையில் தற்போது அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய்வதாக ஆணைக்குழு அமைத்து அதில் தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாங்கள் காண்கின்றோம்.

ஏனெனில் யாருக்காவது அநீதி ஏற்பட்டிருந்தால் அதுதொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் நாட்டில் இருக்கும் நீதிமன்றத்துக்கே இருக்கின்றது.

அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு பெற்றுக்கொண்டு, ஆணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுப்பது சட்டத்துக்கு முரணாகும். குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டாலும் ஒரு நிபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது என்பதே உலகளாவிய நியதியாகும்.

அவ்வாறு இருக்கும் போது ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்வது அரசியல் வழிவாங்கலுக்கு காரணமாகின்றது. அது நல்லதாக அமையாது.

அந்த வகையில் அரசாங்கம் கம்பனிகளுடன் இணைந்துகொண்டு மலையக தோட்ட மக்களை பழிவாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் தற்போது தோட்டங்களில் கிழக்கு அருவடை செய்யும் காலமாகும். அப்படி இருந்தும் அரசாங்கம் கிழக்கு இறக்குமதி செய்திருக்கின்றது. இதனால் தாேட்டங்களின் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 

கிழங்கு இறக்குமதி செய்திருப்பதால் சந்தையில் கிழங்கு 100ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது. இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் வினவியபோது, மலையக தோட்டங்களின் விவசாயிகளிடமிருந்து 100 ரூபாவுக்கு கிழங்கு பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்றார்.

100ரூபாவுக்கு கிழங்கு பெற்றுக்கொள்வதால் அந்த விவசாயிகளுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. ஏனெனில் அவர்களின் உற்பத்தி செலவு 95ரூபாவரை செல்கின்றது. அதனால் குறைந்த பட்சம் 120ரூபாவுக்காவது மலையக தோட்டங்களில் இருந்து கிழங்கை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.