கொரோனாவை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!- ஆதிவாசிகள் தலைவர் கோரிக்கை

4445
4445

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் மொனராகலையில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர், இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கின்றது என்றும் கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கட்சிகள், நிறம், இனங்கள், மதங்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக உழைப்பது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.

இருப்பினும், எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்த ஒரு சில நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கொரோனாவுக்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் இறந்தாலும் அவரிடம் பணம் இல்லை. எனவே, அதற்கான பணத்தைச் செல்வந்தர்கள் வழங்குவதற்கு முன்வருமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனாவுக்கான தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால் வீட்டில் இருக்குமாறு என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். எனவே, நான் தற்போது வீட்டில் இருக்கின்றேன். வீட்டிலேயே மருந்துகளைப் பெறுவதற்கான முறை என்ன? உணவுப் பொருட்களை பெறும் முறை என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படி முரண்படுவதை ஆளும் – எதிரணியினர் நிறுத்த வேண்டும். கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்” – என்றார்.