குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உயர்நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான – கடந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக்த சில்வா, தான் இந்த வழக்கில் இருந்து விலகுகின்றார் என்று தெரிவித்தார். இதையடுத்து புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் ரிஷாத் தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணி அமீர் அலி ஆகியோர் ஆஜராகினர்.