இனாமை நம்பியிருக்கும் அரசு; செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு!

IMG 20210529 125537
IMG 20210529 125537

வெளிநாடுகளால் இனாமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரம் இந்த அரசு நம்பியிருக்கின்றதே தவிர நிதி ஒதுக்கி அதனை கொள்வனவு செய்வதற்கு பின்னடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பயணத்தடையால் அன்றாட கூலித்தொழிலை நம்பியுள்ள மக்கள் உணவிற்கு கஸ்ரப்படும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே அரசு இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொரோனா விடயத்தில் அரசு சரியாக திட்டமிடாமையினால் நாடு மோசமான ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. அது கவலை தருகின்றது. தற்போது யாழ் மற்றும் வன்னியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சொல்கிறார்கள். அது போதாத நிலமை உள்ளது. ஒட்டுமொத்த மக்கள் மீதும் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. 

வெளிநாடுகளால் இலவசமாகவோ, இனாமாகவோ வழங்கும் தடுப்பூசியினை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. தாங்கள் வாங்கப்போகிறோம் என்று சொல்கிறார்களே தவிர அதற்கான நிதி ஒதுக்கீட்டை இதுவரைக்கும் செய்யவில்லை. சும்மா தந்தால் வாங்கும் நிலமையை அரசு எதிர்பார்த்து நிற்கிறது. இது நாட்டுமக்களை பாதுகாக்கும் செயற்பாடாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தடுப்பூசிகள் மூலமாக மாத்திரமே வெளிநாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது.

இந்தியா இலவசமாக வழங்கிய அல்ராசெனேகா தடுப்பூசியினை திட்டமிடாத வகையில் அனைவருக்கும்   செலுத்தி முடித்துள்ளனர். தற்போது இரண்டாவது டோசை செலுத்துவதற்கு சினோபார்ம் ஊசியினை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அல்ராசெனேகா தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஒரு அச்சமான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாவது டோசிற்கான ஊசியினை இந்தியா வழங்கும் மட்டும் முதல் டோசை செலுத்தியவர்கள் அதனை போடாமலா இருப்பது?. இதுவா அரசின் திட்டம்? இந்த விடயங்களில் அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கின்றது. இது கண்டிக்கத்தக்க ஒரு விடயம். 


இதேவேளை பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறது, ஆடைத்தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றது. 
அங்கு தொற்று ஏற்பட்டால் பல குடும்பங்களை அது பாதிக்கும். நாட்டில் முன்னர் ஆடைத்தொழிற்சாலையாலேயே தொற்று பரவலடைந்தது. முல்லைத்தீவிலும் அந்த நிலமை இன்று ஏற்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. அது தொடர்பாக அரசு கவனம் செலுத்தவேண்டும். என்றார்.