யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2,100 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி! – கோட்டாபய விசேட உத்தரவு

kotta
kotta

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 100 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதிபுதன்கிழமை, மறுநாள் 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபார்ம் கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 100 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 100 பேருக்கு உடனடியாக கொரோனாத் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து எதிர்வரும் 2ஆம்திகதி புதன்கிழமை, மறுநாள் 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குச் சினோபார்ம் கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.  

அனைத்துப் பல்கலைக்கழகப் பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கேட்கப்பட்டுள்ளது.