எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீ விபத்து: 100 பில்லியன் ரூபாவை வழங்கினாலும் சுற்றாடல் பாதிப்பை ஈடுசெய்ய முடியாது! – அமரவீர

Mahinda Amaraweera
Mahinda Amaraweera

இலங்கையின் சுற்றாடலுக்கு ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பை 100 பில்லியன் ரூபா வழங்கினாலும் ஈடுசெய்ய முடியாது என்று சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கப்பல் மூழ்கும்போது ஏற்படும் எண்ணெய்க் கசிவைத் தடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. எண்ணெய்க் கசிவு பாரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால், நிபுணர்களின் வழிகாட்டல்களுடன் அதனைப் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கடற்பரப்பில் குறுகிய காலத்தினுள் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றதால், தடுப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

விபத்துக்குக் காரணமானவர்களின் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.