கஜேந்திரனின் சிறப்புரிமையை அவமதித்த யாழ் காவற்துறையினருக்கு எதிராக நடவடிக்கை;கஜேந்திரகுமார் திட்டவட்டம்

kajenthirakumar
kajenthirakumar

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளைப்  பின்பற்றியே அஞ்சலி செலுத்த முற்பட்டார். காவற்துறையினருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால், காவற்துறையினரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிச்  செயற்பட்டனர். கஜேந்திரனின் நாடாளுமன்ற சிறப்புரிமையை அவமதித்த யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய காவற்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்.

என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவுத் தூபிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடா வருடம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அதுபோல் இம்முறையும் கடந்த நாட்களாக அஞ்சலி செலுத்தி வந்தார்.

ஆனால், நேற்றைய தினம் அஞ்சலி செலுத்த முயன்றபோது அங்கிருந்த காவற்துறையினர் தடுத்தனர். எதற்காகத் தடுக்கிறீர்கள்? நீதிமன்ற தடை உத்தரவு  உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், காவற்துறையினரிடம் வினவினார். எனினும், காவற்துறையினர் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர முடியாது எனக்  கூறியே அவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனைக் கைதுசெய்தனர்.

எனினும், கஜேந்திரன் கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில்  “நினைவுகூர்வது தவறு என நாங்கள் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைதுசெய்தோம்” என்று காவற்துறையினர் கூறினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் . அவ்விடத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். காவற்துறையினருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால்,காவற்துறையினரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறிச் செயற்பட்டனர். அராஜகமாக கஜேந்திரனின் உடலைப் பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கைகளை காவற்துறையினர் மேற்கொண்டனர்.

அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவ்விடத்துக்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் காவற்துறையினரால் சட்டவிரோதமாகக் கையாளப்பட்டனர்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அந்த நினைவிடத்துக்குச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் கற்பூரம் ஏற்றி நினைவேந்தல் செய்ய முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டார்?

கஜேந்திரனை கைது செய்தமைக்கு கொரோனா விதிமுறைகள் காரணமல்ல நினைவேந்தல் செய்தமையே காரணம் எனத் தெரிகின்றது. ஏனெனில் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்தில் கஜேந்திரன் மாத்திரம் இருக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இருந்தார்கள். திலீபனின் நினைவிடத்தில் காவற்துறையினர் வந்தததை அறிந்ததும் பல பொதுமக்களும் கூடினார்கள்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திருந்தார்கள் எனில் ஏன் அங்கு கூடிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையில் கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளை மீறவில்லை. அவர் நினைவேந்தல் மேற்கொண்டமைக்காவே கைதுசெய்யப்பட்டார்.

யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய காவற்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம். எதிர்வரும் 27 ஆம் திகதி காவற்துறையினரின் நடவடிக்கைகளைப் பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

சபாநாயகருக்கும் தெரியாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம்.

ஐ.நா. அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் கூட காவற்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கஜேந்திரனை கண்ணியமாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாது கற்பூரம் கொளுத்தும்போதே காவற்துறையினர் நினைவேந்தலைத் தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

தமிழ்த் தேசத்து மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசு கொடுக்கும் எந்தவொரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாகக் கூறுகின்றோம் – என்றார்.