சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் அனைவரும் நிற்கின்றோம் – கோவிந்தன் கருணாகரம்

DSCN1810
DSCN1810

தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும். தனிப்பட்ட அமைப்பு நலன், தனிப்பட்ட கட்சி நலன், தனிப்பட்ட நபர் சார்ந்த நலன் எவையும் இது தொடர்பான தீர்மானம் எடுக்கும்போது கருத்தில் கொள்ளப்படாது. தமிழ்த் தேசிய நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஆனால் இடம்பெறும் நிகழ்வுகளும், நடத்தைகளும் இதற்கு முரணாகவே பளிச்சிடுகிறது.

தமிழ்த் தேசியத்திற்காக ஒருமித்து போராடிய இயக்கங்கள் தமக்கிடையே பிளவுபட்டு மோதுண்டு பின்னர் ஒருங்கிணைந்து பின்னர் பிளவுண்ட வரலாறு எமக்குரியது. அதன் பின்பும் கூட ஜனநாயக அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியத்தின் அவசியம் உணரப்பட்டு முரண்பட்ட அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு வரவைத்து தமிழ் ஒற்றுமை வலுவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஒற்றுமை, இந்த இணைப்பு சிலரது தனிப்பட்ட கட்சி, சிலரது தனிப்பட்ட செல்வாக்கு, சிலரது தனிப்பட்ட அபிலாசைகளுக்குத் தாரை வார்க்கப்படக்கூடாது என்பது தமிழ்த் தேசியத்தை நேசித்த, நேசிக்கும் என்போன்றவர்களின் அவாவும் ஆதங்கமும் ஆகும்.

இது எவர் மீதும் வாசிக்கும் குற்றப்பத்திரிக்கை அல்ல. இன்றைய வாய்ப்பினை எமக்காக மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.