பொருளாதாரச் சிக்கலாலேயே ஊரடங்கு நீக்கம் – இராணுவத் தளபதி

71655ba6 saventhirasilvasep15
71655ba6 saventhirasilvasep15

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுக்குள் வரவில்லை. பொருளாதாரப் பிரச்சினைகளால் நாட்டைத் தொடர்ந்து மூடிவைக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே ஊரடங்குத் சட்டத்தை நீக்கினோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும்.

ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி கொரோனாத் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.

மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும்.

நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது. கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவுக்கமைய தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது.

இந்தக் காலப்பகுதிகளிலும் அதேபோன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்கொண்டு நடத்திச் செல்ல முடியும்.

அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் வழமையான முறையில் நடத்திச் செல்லப்படவுள்ளது. அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.