8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் – உயர் நீதிமன்றம்

supreme court
supreme court

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கும்படி சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (05) அறிவுறுத்தியுள்ளது.

துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாகக் கூறி அநுராதபுரம் சிறையில் உள்ள எட்டு அரசியல் கைதிகள் சார்பாக உயர் நீதிமன்றில் சட்டத்தரணி சுமந்திரனால் மனுதாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்தார்.

தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தங்களை வட மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.