அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றது-சித்தார்த்தன்

Siththarthan
Siththarthan

வினைத் திறனோடு செயற்படுவோமென ஐனாதிபதி கூறுகின்றார் ஆனால் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை. அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றது.இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய நிலையிலேயே இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இழந்து வருகின்றது. காரணம் விலைவாசி உயர்வு, சரியான முதலிலேயே ஆட்சி நடைபெறவில்லை  என்ற எண்ணப்பாடு ஆகும்.

ஆரம்ப காலங்களில் அரசு மிகவும் திறமையாக செயற்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக இருந்தாலும் அண்மைக் காலங்களில் பின்னடைவான நிலையிலேயே காணப்படுகின்றது.அதே நேரத்தில் தடுப்பூசி போடப்படுவதில் மூன்றாம் உலக நாடுகளை பார்க்கின்ற பொழுது இலங்கை முன்னணியில் இருக்கின்றது.

ஆனால் இரவோடிரவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது என்பது மக்கள் வாழ்வதற்கு கஷ்டமான மிக நெருக்கடியான நிலையை ஏற்படுத்தும்.

அரசு சரியாக செயற்படவில்லை என்பதை ஜனாதிபதி அவர்களே கூறுகின்றார். வினைத்திறனோடு செயற்படுவோம் என கூறுகின்றார் பார்ப்போம் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை.அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றது.இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அரசியல் தீர்வு, பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் சாதகமான நடவடிக்கைகளுக்கு  முழுமையான ஆதரவினை நாங்கள் வழங்குவோம்.
இந்த அரசாங்கம் வந்த பொழுதே எமக்கு தெரியும் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள் என தெரியும். ஆனால் குறைந்தது சிறைக் கைதிகளையாவது விடுவிக்கமுடியும். அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்று ஐ.நாவில் ஐனாதிபதி கூறினார். அந்த நடவடிக்கைகளை துரிதமாக செய்ய வேண்டும் அனைவரையும் விடுவிப்பதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.