சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொதுஜன பெரமுன

Podujana Peramuna 2
Podujana Peramuna 2

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரச சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

சுதந்திர கட்சியின் தலைவர்,மற்றும் உறுப்பினர்களின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கது.

இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவதாக என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது மகனை வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நோக்கில் விவசாயிகளினதும், ஆசிரியர்களினதும் பிரச்சினை குறித்து அக்கறை கொள்கிறார்.

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து செல்வதால் எவ்வித பாதிப்பும் பொதுஜன பெரமுனவிற்கு ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (20 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்திற்கும், அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தடையாக செயற்படுகிறார்கள்.

சுதந்திர கட்சியின் தலைவர்,மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்களின் கருத்துக்களும், அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளும் படுமோசமானது.

விவசாயிகள் இரசாயன உரத்தை கோருகிறார்களா,அல்லது சேதன பசளை உரத்தை கோருகிறார்களா, என்பது குறித்து முதலில் அரசியல்வாதிகள் தெளிவுப் பெற வேண்டும்.

சிறந்த நோக்கத்திற்காகவே இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை தடை செய்யப்பட்டது.சேதன பசளை திட்டம் ஒரு தரப்பினரது அரசியல் நோக்கத்திற்காக நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய தேவையான அளவு சேதன பசளை உரம் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன்,ஒரு சில இரசாயன திரவங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் விவசாய நிலங்களுக்கு செல்லாமல் ஒரு சில அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது மகனை வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சராக களமிறக்கும் நோக்கில் தற்போது விவசாயிகளினதும், ஆசிரியர்களினதும் பிரச்சினை குறித்து அக்கறை கொள்கிறார்.இவர்களின் நோக்கம் இம்முறை வெற்றிப்பெறாது.

 அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்கிறோம் என சுதந்திர கட்சியின் தலைவரும், அக்கட்சியின் உறுப்பினர்களும் குறிப்பிடுவது பைத்தியகாரதனமான கருத்தாகும். அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாத்ஙகளை முழுமையாக பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சுதந்திர கட்சியின் தலைவருக்கும்,அக்கட்சியின் உறுப்பினர்களுக்கும எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பாராளுமன்றின் பின்வரிசை உறுப்பினர்கள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் வலியுறுத்துகிறோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை.

பொதுஜன பெரமுன கட்சி ஊடாக தான் சுதந்திர கட்சியினர் இன்று அரசியலில் நிலைத்துள்ளார்கள். இதனை அக்கட்சியினர் ஒருபோதும் மறக்க கூடாது. இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியினர் தனித்து போட்டியிட்டால் எவ்வித பாதிப்பும் பொதுஜன பெரமுனவிற்கு ஏற்படாது என்றார்.