மொட்டு கூட்டணி மோதல் முடிவுக்கு வரும் சாத்தியம்

2 1
2 1

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்களால் அரச பங்காளிக் கட்சிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றன என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தலைமைக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கும், பங்காளிக் கட்சிகளுக்குமிடையில் அண்மைக்காலமாக கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது. முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிகளுக்கு மொட்டு கட்சி அறிவிப்பு விடுத்துவிட்டது. மறுபுறத்தில் பங்காளிகளும் மொட்டுக் கட்சி மீது கடும் விமர்சனக்கணைகளால் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 5ஆவது தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ‘நெருக்கடியான சூழ்நிலையில் எம்முடன் பயணித்த கட்சிகளை ஓரங்கட்டக்கூடாது. பங்காளிக் கட்சிகள் என்பவை கைப்பாவைகள் அல்ல. எனவே, கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய பிரதான பொறுப்பு தலைமைக்கட்சிக்கே இருக்கின்றது’ என்று சுட்டிக்காட்டினார்.

பிரமரின் இந்த அறிவிப்பால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, புதிய ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.