அமெரிக்காவுக்கு புறப்பட்டது சுமந்திரன் தலைமையிலான குழு

sumanthiran500
sumanthiran500

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் அடங்கிய சட்ட நிபுணர்கள் குழு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் இன்றைய தினம் அமெரிக்காவைச் சென்றடையவுள்ளனர்.

இவர்கள் இம்மாத இறுதி வரையில் அமெரிக்காவில் தங்கியிருந்து அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பொன்றின் பெயரில் இவர்கள் பயணமாகியுள்ள நிலையில், அமெரிக்காவின் சட்ட நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன் பரஸ்பர கலந்துரையடல்களில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக கருத்து வெளியிட்ட சுமந்திரன், 

“புதிய அரசியலமைப்பு வரைவொன்றை இலங்கை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறியுள்ள நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையிலான அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு, சமஷ்டி முறைமைகள் உள்ளிட்ட சட்ட நியாயாதிக்கம் மற்றும் ஏனைய சட்ட விவகாரங்கள் தொடர்பில் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்துரையாடவுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.