மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

IMG 20211122 WA0001
IMG 20211122 WA0001

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவல்துறையினர் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் காவல்துறையினரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி இன்று (22) சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.

வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிவான் யூட்சன் பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் தொடர்பாக தெளிவாக அறிந்திருப்பார்கள்.

எனவே அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஆனால் பெயர் குறிப்பிட்ட நபர்களும் ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று குறித்த நபர்களுக்கு எதிராக தடையுத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்து குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி மணிவண்ணன் சட்டத்தரணி சதீஸ்வரன் சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.