கெரவலப்பிட்டிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்களில் உள்ள எரிவாயு மாதிரிகள் பரிசோதனைக்கு

1639802328 LNG L
1639802328 LNG L

கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள மேலும் இரண்டு கப்பல்களிலும் பரிசோதனைகளுக்காக எரிவாயு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கப்பலில் அடங்கியுள்ள திரவ பெற்றோலிய எரிவாயுவுக்கு, நுகர்வோர் அதிகார சபையும், இலங்கை தரநிர்ணய நிறுவகமும் அனுமதி வழங்கிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவின் தரம் தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண முன்னர் அறிவித்திருந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட எரிவாயு, உரிய தரத்துடன் இல்லை என தெரியவந்தமையை அடுத்து அதனை இறக்குவதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதியளிக்கவில்லை.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை மற்றுமொரு எரிவாயு கப்பல் கெரவலப்பிட்டிய பகுதியில் நங்கூரமிடப்பட்டது.

குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த இரண்டு கப்பல்களில் ஒரு கப்பலில் உள்ள எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதி வழங்குப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்

குறித்த கப்பலுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது, அதில் பிரச்சினை எதுவும் இல்லை என தெரியவந்தமையை அடுத்து அவற்றை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது கெரவலப்பிட்டிய எரிவாயு முனையத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு கப்பல்களிலும் இருந்து பெறப்பட்ட எரிவாயு மாதிரிகளின் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.