வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் மதுராநகர் கிராமத்தில் இந்திய தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பல பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கிராம மக்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவும் நேக்கோடு தமிழக அரசினால் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இவை அதிகளவில் வடக்கு மக்களின் பசி போக்கும் திட்டத்தில் கிராம சேகவர் பிரிவு ரீதியில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் பின்தங்கிய கிராமமாக கருதப்படும் மதுராநகர் கிராமத்தில் அதிகமான அரிசி மூடைகள் அங்குள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தின் அறையில் அடுக்கி வகைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களினால் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட அரிசி புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்டது.
அப்பகுதி மக்களில் சிலர் அண்மையில் வெள்ள அனர்த்தத்திற்குமுகம் கொடுத்திருந்த நிலையில் மக்கள் உணவுக்கு பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்த அப்பகுதி மக்கள் கிராம சேவகரும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் இணைந்தே இதனை பதுக்கி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்கள் பதுக்கி வைக்கப்பட்ட அரிசியை கண்டு பிடித்த நிலையில் அதனை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்காக குடும்ப அட்டைகளுடன் வருமாறு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அங்கு வந்த மக்கள் குறித்த அரிசி வண்டுகள் நிறைந்து காணப்பட்டதால் கடும் கோபமடைந்திருந்ததுடன் கிராம சேவகரே அரிசியை வழங்காமல் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக கிராம சேவகர்களின் தலைமை அதிகாரி தெரிவிக்கையில்,
குறித்த அரிசி மழையின்போது கொண்டு வந்து இறக்கப்பட்டதால் அதனை மக்களுக்கு வழங்க முடியாது காணப்பட்டதால் அதனை மீளளிப்பு செய்து வேறு அரிசி அம் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அரிசி கோழிக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தாகவும் சிலருக்கு வழங்கப்பட்டதாகவும் ஏனையவர்களுக்கு வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவித்ததுடன் இதற்கான அனுமதி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு பெறப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசனிடம் கேட்டபோது,
இவ்விடயம் தொடர்பாக அனாத்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்திற்கு அனுப்பி அறிக்கையிடுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவ் அறிக்கை கிடைத்ததுடன் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.