அரச இயந்திரம் ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காது இயங்க முடியாத நிலையில் உள்ளது-முஷாரப் எம்.பி!

richar 1
richar 1

பி.சி.ஆர்.பரிசோதனையைக் காரணம் காட்டி ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்றம் வரும் உரிமை கூட மறுக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கடசி நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுதெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர். ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்கமுடியாத நிலையில் உள்ளது. நாடாளுமன்றமும் அரசும் ரிஷாட் என்ற ஒரு பெயரைச் சுற்றியே இயங்குகின்றது. நாட்டுத்தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுவதனைவிடவும் ரிஷாட் பதியுதீன் என்ற பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. ரிஷாட் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

அவர் கைதானாலும் நாடாளுமன்றம் வருவதற்கான உரிமை உள்ளது. அதற்கான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கியபோதும் ரிஷாத்துக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக்கூறி நாடாளுமன்றம் வருவதற்கான அவரின் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தவறான முடிவுகள் வெளிவருவதனையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.