புனர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளில் எந்த உதவிகளும் கிடைக்காத 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கான இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ள ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் முதல் கட்டமாக ஏற்றம் அறக்கட்டளை இயக்குனர்களில் ஒருவரான பேரின்பராசா லோஜிதன் தலைமையில் சில குடும்பத்தை தெரிவு செய்து இன்று(11.11.2020) மாலை 04.30 மணியளவில் மட்டக்களப்பு- முறக்கொட்டான்சேனை பகுதியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தையல் இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள், காணி உறுதி பத்திரம், பலசரக்கு பொருட்கள் மற்றும் பண உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் முதல் கட்ட உதவிகளின் போதே சுமார் ரூபா 6 இலச்சத்துக்கும் அதிகமான பணம் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வின் போது கருத்துரையாற்றிய ஏற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் உறுப்பினர் பேரின்பராசா நிமலதீபன்,
புலத்தில் இருந்து பல கோடிகள் பெறுமதியான உதவிகள் ஒவ்வொரு வருடமும் தாயகத்திற்கு வந்து சேர்கின்ற போதும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் கையேந்தும் நிலைமையிலேயே உள்ளார்கள். இதற்கான பிரதான காரணமாக நாம் பார்ப்பது குறித்த குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்திற்குரிய வழிகளை ஏற்படுத்தாமையே. அந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஏற்றம் அறக்கட்டளையினராகிய நாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் புனர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளில் எந்த உதவிகளும் கிடைக்காத 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கான இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளோம். அதன் முதல் கட்டமாக தற்போது நான்கு குடும்பத்திற்கு அவர்களின் தேவைளை அறிந்து இந்த உதவிகளுடன் யாரையும் எதிர்பாராது தங்கள் வாழ்வாதாரத்தை தொடர்ந்து நடாத்தி செல்ல முடியும்.
இதே வழியில் புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழரும் தாயகத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்தால் எமது மக்கள் அனைவரின் வாழ்விலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றத்தை காணலாம். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.