முந்தனையாறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தினை பார்வையிட பிரான்ஸ் நாட்டு தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்!

DSC 0258
DSC 0258

முந்தனையாறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் உறுகாமம் – கித்துள் இணைப்பினூடாக அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத் திட்டத்தினை பார்வையிட பிரான்ஸ் குடியரசின் தூதுவர் எரிக் லவெர்டு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 90 எம்.சி.எம். ஆக உயர்துவதற்கான கோரிக்கைகளும் அதனால் பெற்றுக்கொள்ளப்படவிருக்கும் நன்மைகள் பற்றியும் பிரான்ஸ் நட்டு தூதுவர் எரிக் லவெர்டுவிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனால் தெளிவுபடுத்தப்பட்டது.

இவ் அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இடங்களுக்கு களவிஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லவெர்டு, அங்கு பிரசன்னமாயிருந்த விவசாயிகள், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிகளையும் சந்தித்த பின்னர் அரசாங்க அதிபருடனான சந்திப்பினை மேற்கொள்ள மாவட்ட செயலகத்திற்கு இன்று (03) வருகைதந்திருந்தார். இச்சந்திப்பின்போதே அரசாங்க அதிபர் கருணாகரன் இவ்விடயங்களை தூதுவருக்கு தெழிவு படுத்தினார்.

இதன்போது பிரன்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லவெர்டு கருத்துத் தெரிவிக்கையில், இந்நீர்த் தேக்கத்தினை முழுமையாக 90எம்.சி.எம். கணவளவுள்ளதாக அமைப்பது அல்லது 90 எம்.சி.எம். இற்கான அத்திவாரத்தினை இட்டு 58 எம்.சி.எம். கொள்ளவான அணைக்கட்டை அமைத்தல் அல்லது முழுவதும் 58 எம்.சி.எம். ஆன நீர்த்தேக்கத்தினை அமைத்தல் என்ற மூன்று கருத்துக்களில் எதனை பிரான்ஸ் நாட்டு அரசு, இலங்கை அரசு, நிதி வழங்குனர்கள் மற்றும் துறைசார் நிபுனர்கள் ஆதரிக்கின்றார்களோ அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்சனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அமிர்தலிங்கம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். சதீஸ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பிரசன்னமாயிருந்தனர்.