அரசியல் பழிவாங்கல்கள் விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

photo 2
photo 2

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் கையளித்துள்ளார்.

மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரத்து 43 பக்கங்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவால் நியமிக்கப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டுவதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திர ஜயதிலக்க மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.