வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக வாகனங்களுக்கு சமிக்கைகள் பொருத்தும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவில் நேற்று(09) இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதோடு உயிரிழப்புகள், காயங்கள்,சொத்திழப்புக்களும் ஏற்பட்டு வருகின்ற நிலமையில் இவற்றை தடுக்கும் முகமாக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவில் அமைந்திருக்கின்ற அவலோன் தனியார் நிறுவனமும், முல்லைத்தீவு மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவும் , முல்லைத்தீவு மாவட்டத்தின் காவல் நிலையங்களும் இணைந்து வாகனங்களில் குறித்த சமிக்கை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக உழவு இயந்திரங்கள் வீதியில் பயணிக்கின்ற போது அதில் எந்த விதமான சமிக்கைகளும் தெரியாமல் இருக்கின்ற நிலையில் அதற்கு வீதியில் செல்லும்போது தெரியக்கூடிய வகையில் சமிக்கைகளை பொருத்த நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உழவு இயந்திரத்தின் பெட்டிகளில் வெளிச்சம் படும் போது அது பட்டு தெறிப்படைந்து குறித்த வாகனம் முன்னே செல்கிறது என்பது தெரியக்கூடியவகையில் குறித்த உழவு இயந்திரத்தின் பெட்டியில் சமிக்கைகளும் பொருத்தப்பட்டு வீதியில் ஏற்படுகின்ற விபத்துகளை தடுக்கும் முகமாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.