வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் இறுதி நாள் விவாதம் இன்று இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்று அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வரவுள்ளன.
நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் 4 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
அதன் பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், இறுதி நாளான இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“