யாழ்ப்பாண, மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த தொற்றுக்குள்ளானவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களுக்கு நாளையதினம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளிடம் எழுமாறாக பீ.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், பீ.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளானவர் சகல பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளையதினம் அவருடன் தொடர்புபட்டவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதனடிப்படையில் குறித்த சந்தையினை மூடுவதா? அப்பகுதியை முடக்குவதா? என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.