வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் வீதியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் காவல்துறையினரால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக கடந்த (05.12.2020) அன்று உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக வவுனியா – மன்னார் வீதியினை தடை செய்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் காரணமாக
வவுனியா – மன்னார் பிரதான வீதி போக்குவரத்து 3 மணிநேரம் தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த போராட்டத்தினை மேற்கொண்ட முக்கிய 6 நபர்கள் மீது வவுனியா மாவட்ட நீதிமன்றில் அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியமை , கொரோனா விதிமுறைகளை மீறி செயற்பட்டமை போன்ற பல குற்றச்சாட்டினை முன்வைத்து வவுனியா காவல்துறையினரால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.