கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று (17) பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி றக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று கல்முனையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் மேலும் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக நாளை முதல் கல்முனை ஸாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி (Rest house Road) வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை உட்பட சகல நிறுவனங்களையும் நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை முழுமையாக சன நடமாட்டத்தை மட்டுப்படுத்தி பொது மக்களை வீடுகளிலே தங்கி இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இவ் உயர் மட்ட குழு கூடி தொடர்ந்தும் இவ் நிலையினை நீடிப்பதா?இல்லையா? என முடிவு எடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் உயர்மட்ட கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் நஸீர், கல்முனை மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் அர்சாத் காரியப்பர், கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்னி, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கணஸ்வரன், கல்முனை காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த கல்முனை வர்த்தக சங்க தலைவர் சித்தீக், செயலாளர் ஹமீட், கல்முனை சந்தை வர்தக சங்க செயலாளர் கபீர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.