பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் விவசாயம் பாதிப்பு

01 12 1
01 12 1

மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மண் மூடை அமைத்து தற்காலிக அணைக்கட்டினை அமைத்து விவசாய செய்கையை செய்து வந்தனர்.

அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரில் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்தமையினால் எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளான்மையை முற்று முழுதாக இழந்த நிலையிலும், இதன் காரணமாக பெற்றுக் கொண்ட கடன் தொகையை செலுத்துவது எவ்வாறு என்ற கவலையிலும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு புணாணை அணைக்கட்டின் பத்து வான் கதவுகளில் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டதுடன், அதுவும் பூரணமாக திறக்கப்படாது காணப்படுவதுடன், பத்து வான் கதவுகளும் திறக்கப்படும் பட்சத்தில் விவசாய நிலங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் நீர்பாசன திணைக்களத்தினருக்கு விவசாய அமைப்பினரால் அறிவித்தல் வழங்கியும் இதுவரை குறித்த பகுதிக்கு வருகை தரவில்லை என்றும், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.