யாழ் நகரின் பாதுகாப்பு இராணுவத்திடம்? : அரசாங்க அதிபர் விசேட அறிவிப்பு!

க. மகேசன்
க. மகேசன்

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் காவல்துறையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றது

இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போதைய நிலைமையில் எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தல், அத்தோடு சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளதுடன், தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக உடுவில், தெல்லிப்பளை சங்கானை, சண்டிலிப்பாய், கோப்பாய், பிரதேச செயலர் பிரிவுகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அத்தோடு நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிலும் தொற்றுக் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது.

நேற்றைய நிலவரத்தின் படி 2275 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

406 குடும்பங்கள் உடுவில் பிரதேசத்திலும் 350 குடும்பங்கள் தெல்லிப்பளையிலும், 260 குடும்பங்கள் கோப்பாயிலும், 163 குடும்பங்கள் சங்கானையிலும் தனிமைப்படுத்த பட்டுள்ளார்கள்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் அந்தந்த பிரதேச செயலர் பிரிவில் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றன. அரச சுற்று நிருபத்தின் அடிப்படையில் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது.

எப்படியாயினும் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ஆளுநர் கவனம் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் கட்டுப்பாடுகளை மீறி வெளியே நடமாடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் சுகாதாரப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முகமாகவே இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இன்று வரை தொற்று இனங் காணப்படவில்லை. அதைத் தவிர ஏனைய அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிலும்  குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே அந்தப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வெளியில் நடமாடடாதவாறு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு நமது மாவட்டத்தை பாதுகாக்க முடியும்” என அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலர்கள் மற்றும்  சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.