எதிர்வரும் 15 ஆம் திகதி வரை காத்தான்குடி பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் இதனை தெரிவித்தார்.
இதேவேளை நேற்று இரவு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அனர்த்த முகாமைத்து நிலையம் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 13 ஆயிரத்து ஒரு குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 387பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.