நாட்டின் சனத்தொகையில் 25வீதத்திற்கு அதிகமாக உள்ள சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் வெறும் 3 வீதத்தை ஒதுக்கி உள்ளது கோடபாய – மகிந்த அரசாங்கம்.
இன்று பதவியேற்றுக்கொண்ட இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுடன் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. ஆனால் இந்த அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. அண்மைக்காலங்களில் ஆட்சி அமைத்த எந்த ஒரு அரசாங்கமும் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் இடமளித்தது இல்லை.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 90வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் சஜித் பிரேமாதாச அவர்களுக்கே வாக்களித்திருந்தனர். அமைச்சரவையில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவதானது, தனக்கு எதிராக வாக்களித்த சிறுபான்மை இனத்தைப் பழிவாங்கும் நடவடிக்கையில் கோடபாய ஈடுபடுகிறாரோ என அச்சம் வெளியிடப்படுகிறது.