வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி – மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.05 மணிக்குக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாக்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில் வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சிவில் உடையில் நின்ற புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டனர். எனினும் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உறவுகள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வடமராட்சி தீருவில் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.