எதிர்காலத்தில் தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தோட்ட வைத்தியசாலைகள் குறித்து தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும், தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தாம் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தோட்ட வைத்தியசாலை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இந்த தோட்ட வைத்தியசாலைகளுக்கு முடியுமானவரை அதிகளவான மருத்துவர்களை நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தோட்ட வைத்தியசாலைகளுக்கு தமிழ் மொழி பேசக்கூடிய குடும்ப சுகாதார அதிகாரிகளை இணைத்துக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.