யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சேனாதிராசா அவர்களின் தலைமையில் வழமை போன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது (கார்த்திகை 27) இன்று நடைபெற்றது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் அறப் போரில் ஆகுதியாகிய வீர மறவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முதற் சுடரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் தனது அஞ்சலியையும் செலுத்தினார்.
இவ் நினைவேந்தலில் வடக்கு மாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.