கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் முதலாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பாக கலந்துரையாடல் வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்புடன் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் வகையில் பாடசாலை அதிபர் எஸ்.மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பிரதேச பொது சுகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகஸ்தர், கிராம அவிபிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அவிபிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தற்போதைய கொரோனா காலத்தில் மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய விடயங்கள், பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதிபர், ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டது.
மாணவர்களின் தளபாட பற்றாக்குறையை தீர்ப்பதற்கான வேலைத்திட்டமும் நடைபெற்று வருவதுடன், மிக நீண்டகால தளபாடங்கள் பற்றாக்குறை ஓரளவு நிவர்த்தி செய்யப்படுகின்றது. அந்த வகையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் சேதமடைந்த வேலிகள் திருத்தும் பணிகள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் வகுப்பறைகளின் சேதமடைந்து காணப்படும் கதவுகள், யன்னல்கள் திருத்துதல் தொடர்பில் நடைபெற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.