வடகிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு அனைத்து தரப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை உடைத்தமைக்காக நாளையதினம் வட கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு அனைத்து தரப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும்.
போரில் வென்றவர்கள் எதிரிக்கு கொடுக்கும் உயர் கௌரவம் நினைவேந்தலே. ஆனால் எம் சமூகம் இறந்தவர்களை கூட நினைவேந்த முடியாத நிர்க்கதியான நிலைக்கு ஆளாகிவிட்டோம். ஆளும் கட்சிக்கு சோரம் போய் எம்மவர்களின் நினைவையும் மீட்ட முடியாமல், எஞ்சியுள்ள தடயங்களான நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு, தகர்க்கப்படும் செயற்பாடானது வேதனையானதுடன், கண்டிக்கத்தக்கதுமாகும்.
வட கிழக்கில் தேசிய கட்சிகளினதும் அவர்களின் ஆதரவு கட்சிகளிற்கும் பின்னால் எமது இளைஞர்களும், யுவதிகளும் குறுகிய நலனுக்காக அலையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல ஆளும் கட்சியுடன் ஒட்டி வாழ வேண்டும் என்ற அரச இயந்திர நிர்வாகிகளின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பே இந்த மிலேச்சதனமான செயற்பாடு.
அனுமதியற்ற கட்டிடம் என்பது கல், மண், சீமெந்துடன் கூடியது, ஆனால் எம் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் எம் தமிழ் சமூகத்தின் ஆத்மார்த்தமான உணர்வுடன் பிண்ணிப்பிணைந்தது. எனவே பல்கலை நிர்வாகத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.