தகவல் தொழில் நுட்ப துறைக்கான வரி நீக்கம்

bandula gunawardana 2
bandula gunawardana 2

தகவல் தொழில் நுட்ப துறை அனைத்து வரிகளிலும் இருந்து விடுவிக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து வரிகளும் முற்றாக நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

வருமான வரி, வற் அல்லது தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளிலும் இருந்து இத்துறை விடுவிக்கப்படுவதாக தெரிவித்த அவர் நாட்டுக்கு பெரும் வருமானத்தை தேடித்தருவது தகவல் தொழில் நுட்ப துறையாகும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்த தீர்மானத்தினால் தகவல் தொழில்நுட்ப துறையில் பாரிய அபிவிருத்தி ஏற்படும் என்றும் கூறினார்.

தகவல் தொழில் நுட்ப துறையின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கியுள்ள பாரிய பின்புலமாக இது அமையும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த துறையில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் மென்பொருள் உள்ளிட்ட தயாரிப்புக்களை உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். முன்னைய அரசாங்கத்தின் வரி கொள்கையின் காரணமாக இத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இதனை கருத்தில் கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்திற்கும் நாம் முக்கியத்துவம் வழங்கியிருந்தோம் என்று தெரிவித்த அவர் இத் துறையின் வரி மூலம் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இத்துறை மேலும் அபிவிருத்தி அடைவதுடன் நாட்டுக்கான வெளிநாட்டு மற்றும் உள்ளுர் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.