வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று!

big 165616 Coronavirus
big 165616 Coronavirus

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கடந்த சனிக்கிழமை மில் வீதியில் மேற்கொண்ட பி.சிஆர் பரிசோதனையில் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் இருவருக்கும் என நான்கு பேருக்கு இன்று மதியம் (12.01) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 128 பேர் வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் இன்று (12.01) முதல் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.