ஓட்டமாவடியில் சிகையலங்கார நிலையங்களை திறக்க அனுமதி

01 1 1
01 1 1

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர். எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகையலங்கார நிலையங்களை திறப்பது தொடர்பாக விசேட கூட்டம் இன்று(13) சுகாதார வைத்திய அதிகாரி கேட்போர் கூடத்தில் வைத்திய அதிகாரி வைத்தியர் . எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிகையலங்கார வேலைகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடு தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சிகையலங்கார வேலைகளில் ஈடுபடுவோர் சுகாதார பகுதியினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும் சிகையலங்கார நிலையத்திற்கு வருவோர் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், அதிகமானோர் கடைகளில் அமர்ந்திருக்க முடியாது. முடி வெட்டும் போது அணிவதற்காக துணி உரியவர்கள் கொண்டு வர வேண்டும். வருபவர்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

அத்தோடு சுகாதார பிரிவினர் குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு வருகை தரும் போது வழங்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறையில் செயற்படுத்தாமல் காணப்படும் நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஓட்டமாவடி பிரதேச சபையினால் வழங்கப்படும் வருடாந்த வியாபார சான்றிதழ் மீள் பரிசீலனை செய்யப்படுவதுடன், சிகையலங்கார நிலையத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர். எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.