களுத்துறை மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை திறப்பது குறித்து பரிசீலிக்க குழு நியமனம்!

DS Kalithura
DS Kalithura

அட்டலுகம உடபட தனிமைப்படுத்தப்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகளை அடுத்த சில நாட்களில் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனககுமார இன்று கூறினார்.

அட்டலுகம உட்பட 9 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்துதல் தொடர்பாக பண்டாரகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலின் பின் அவர் ஊடகங்களுக்கு தகவல் தருகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அட்டலுகமவிற்குள் உள்ள கிராம சேவகர் பிரிவுகள் கடந்த 2020 நவம்பர் 21முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றும் சில கிராம சேவகர் பிரிவுகளைத் திறக்க முடியுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.