மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

WhatsApp Image 2021 01 16 at 14.11.35
WhatsApp Image 2021 01 16 at 14.11.35

மட்டக்களப்பு நகர் மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பால் இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி இன்று (16) கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதி முடக்கப்பட்டு வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுறுதி கண்டறியப்பட்டது .

இதனையடுத்து குறித்த நபரின் சடலம் அங்கிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருவதுடன் அந்தபகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியிலுள்ள வீதிகள் யாவும் மூடப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.