ரோயல் பார்க் கொலையாளி வெளிநாடு செல்ல தடை

royal park murder
royal park murder

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்த ஜூட் ஸ்ரீமந்த அன்டனி ஜயமஹவிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதியான இவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (Nov.29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மரணத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் குறித்த நபரை மாத்திரம் தேர்ந்தெடுத்து முன்னாள் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளமையானது அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள பிரதிவாதி, தற்போதைய நிலையில் வௌிநாடு சென்றுள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த மனு விசாரணையை எதிர்வரும் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதிகள் குழாம், பிரதிவாதியான ஜூட் ஸ்ரீமந்த அன்டனி ஜயமஹவிற்கு வௌிநாடு செல்ல தடை விதித்து இடைக்காலத் தடையுத்தரவும் பிறப்பித்துள்ளது.