கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாளை முதல் வழமைப்போல நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற அமர்வை நடத்திச் செல்லல் மற்றும் சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற பணிக்குழு மற்றும் ஏனைய பணியகங்களுக்கு உட்பட்ட 5 பேர் அடங்களாக 9 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்களில் மூன்று பேர் பாதுகாப்பு பிரிவு மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றுபவர்கள் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 13 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பணிக்குழாமினர் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஏனைய பணியக உறுப்பினர்கள் அடங்களாக 943 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அதில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்றத்தின் எந்தவொரு காரியாலயமும் தற்சமயம் மூடப்படவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற கட்டிடம் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேதவிர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.